கடந்த 2023ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் லியோ. உலக அளவில் பல நூறு கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. கடந்த 2017 ம் ஆண்டு தமிழில் வெளியான “மாநகரம்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தான் தளபதி விஜயை வைத்து இரண்டாவது முறையாக இந்த லியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். கமர்சியல் ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து “விக்ரம்” என்கின்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவருடைய லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சுக்குள் லியோ திரைப்படத்தையும் கொண்டு வந்திருந்தார். ஏற்கனவே அவர் தளபதி விஜய் வைத்து “மாஸ்டர்” என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் “கைதி”, “விக்ரம்” மற்றும் “லியோ” ஆகிய மூன்று திரைப்படங்களை இணைத்து தான் தன்னுடைய சினிமாடிக் யுனிவர்சை தற்பொழுது வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ள அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செம பிசி.

தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” என்கின்ற திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அப்பாடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார். இடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சில நாள் ஓய்வுக்குப் பிறகு வருகின்ற அக்டோபர் மாதம் 15ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் மீண்டும் கூலி திரைப்படத்தின் இரண்டாம் கட்ட பணிகளை துவங்குகிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழல்களில் அண்மையில் அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கிருந்த இளம் திரையுலக கலைஞர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.

அதில் லியோ திரைப்படம் குறித்து கேட்ட பொழுது, தளபதி விஜய் நடிக்க வேண்டும் என்று தனக்கும் ஆசை இருப்பதாகவும், ஆனால் அவர் இப்போது எடுத்திருக்கும் முடிவு என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் அதில் நாம் தலையிட முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும் லியோ திரைப்படம் பற்றி பேசிய லோகேஷ் கனகராஜ், ஒருவேளை அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அந்த திரைப்படத்திற்கு “லியோ 2” என்று பெயரிடாமல் “பார்த்திபன்” என்று பெயரிட வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். தளபதி விஜய், லியோ திரைப்படத்தில் லியோதாஸ் என்கின்ற கதாபாத்திரத்திலும் பார்த்திபன் என்கின்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

படத்தின் இறுதிக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜயோடு பேசுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் நிச்சயம் லியோ இரண்டாம் பாகம் உருவாகும் என்று நம்பப்பட்ட நிலையில் தான் விஜய் அரசியலில் களமிறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.