பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம் உருவாகி வருகிறது.
இதில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடித்து வருகிறார்.
கடந்த 2016ம் ஆண்டு பிரபல இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான “இறுதி சுற்று” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் எழுத்தாளராக களம் இறங்கியவர் தான் அருண் மாதேஸ்வரன். அதன்பிறகு கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் வசந்த் ரவி நடிப்பில் வெளியான “ராக்கி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் திரை உலகில் களம் இறங்கினார். அந்த முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான “சாதி காகிதம்” திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே அவரை திரும்பி பார்க்க வைத்தது என்றால் அது மிகை அல்ல.
இந்த சூழலில் தான் பிரபல நடிகர் தனுஷை வைத்து “கேப்டன் மில்லர்” என்கின்ற திரைப்படத்தை இயக்க தொடங்கினார் அருண் மாதேஸ்வரன். மிகப்பெரிய பொருட்ச செலவில் பல சிறந்த நடிகர்கள், நடிகைகளின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் 100கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இந்த சூழலில் தான் தன்னுடைய அடுத்த திரைப்படத்தையும் நடிகர் தனுசை வைத்து இயக்க முடிவு செய்தார் அருண் மாதேஸ்வரன்.

ஆனால் வழக்கமாக அவர் இயக்கும் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, தமிழ் சினிமாவின் மிக மூத்த இசை கலைஞராக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க அருண் மாதேஸ்வரன் முடிவு செய்தார். மேலும் இந்த திரைப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமானார். இதுகுறித்து இளையராஜாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரனுக்கும் தனது வாழ்த்துக்களை இளையராஜா சொல்லியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டின் நடுப்பகுதியிலேயே இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் அது குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகாமல் இருக்கிறது. இதற்கு இடையில் “ராயன்” திரைப்படத்தை முடித்த தனுஷ், தற்பொழுது “இட்லி கடை”, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”, தெலுங்கு மொழியில் “குபேரா” ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் நேரத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜை வைத்து மற்றொரு திரைப்படத்தையும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி தொடர்ச்சியாக அவர் பிற படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில், அவர் மீண்டும் எப்பொழுது இளையராஜா திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்பது சந்தேகமாகியிருக்கிறது. இவ்வாண்டு இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்படும் என்று எண்ணிய நிலையில், தற்போது அது அடுத்த ஆண்டு வரை நீள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.