இயக்குநர் செல்வராகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவர். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கார்த்தி, ரிமா சென், அண்டிரியா, பிரதாப் போதன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியான போது பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் காலம் கடந்து இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ஆனால் இப்படம் தெலுங்கில் யுகனிக்கி ஒக்கடு என்ற பெயரில் வெளியானபோதே பெரிய வெற்றியை பெற்றது. 12ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களுக்கு எதிரான போரில் தோற்ற சோழர்கள் பாண்டியர்களின் மீன் சிலையுடன் தலைமறைவாக சென்று வாழ்ந்து வருகின்றனர். தூதனின் நல்ல செய்திகாக காத்துக்கொண்டிருக்கும் சோழ மக்கள் தங்களை யாரும் நெருங்கி விடக்கூடாது என்பதற்காக 7 பொறிகளை வைத்து வாழ்கின்றார்கள்.
சுமார் 8 நூற்றாண்டுகளுக்கு பின் ஆராய்ச்சியாளர் ஒருவர் அவர்களை தேடி செல்கின்றார. அந்த ஆராய்ச்சியாளரை தேடி ஒரு குழு செல்கிறது. அவர்கள் எப்படி அந்த பொறிகளை கடந்து செல்கிறார்கள், அங்கு சென்ற பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இப்படியான ஒரு கதையை தமிழ் சினிமா அதுவரை பார்த்திருக்கவில்லை. எனவே படத்தின் கதைகளமும் பின்னணி இசையும் பெரிதாக பேசப்பட்டது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவர் இரண்டாம் பாகம் குறித்து மணம் திறந்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் செல்வராகவன், “நாங்கள் செய்த தவறு என்னவென்றால் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை விரைவாக வெளியிட்டதுதான். கார்த்தி இல்லாமல் இப்படத்தை இயக்க முடியாது. இந்த கதைக்களம் என்பது மிகவும் சிக்கலானது. படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
அதேசமயம் இந்த காலத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பது எளிது. பொருட்செலவு பெரிதாக இருக்காது என்றாலும், நடிக்க நடிகர்களின் கால்ஷீட் குறைந்தது ஒரு வருடமாவது வேண்டும். இதுவரை அதற்கான நேரம் கைக்கூடவில்லை. நேரம் கைகூடினால் கண்டிப்பாக ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.