ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள படம் குட் பேட் அக்லி. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களையே பெற்றது. இதன் காரனத்தால் குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித் குமாருடன் த்ரிஷா, பிரபு, எஸ்.ஜே. சூர்யா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும்பாலானவர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மார்க் ஆண்டனி, இப்பட்ம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்து படம் எடுப்பதால், குட் பேட் அக்லியும் அவ்வாறே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
அதில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி என்ற மூன்று கதாபாத்திரங்களும் அனைவருக்குள்ளுமே இருக்கும். இந்த உலகம் நம்மிடம் நல்லபடியாக நடந்துக்கொள்ளும்போது நாம் குட்டாகவும், பேட்டாக நடந்துக்கொள்ளும்போது நாம் அக்லியாக மாற வேண்டி இருக்கும். இதுவே இப்படத்தின் ஒன்லைன். இப்படத்தின் டைட்டிலை அஜித்தான் சொன்னார்.
இப்படத்தில் அஜித் குமார் பில்லா மற்றும் தீனா பட கெட்டப்களில் நடித்துள்ளார். இப்படம் ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல் எமோசனல் படமாகவும் இருக்கும். அப்பா – மகன் இடையே இருக்கும் எமோசன் நன்றாக படத்தில் வேலை செய்யும் என நம்புகிறேன். ஏப்ரல் மாதம் அஜித் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட்டாக இருக்கும். ஒரு நடிகராக அவர் என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தை பற்றி கூறிய உடனயே அவர் ஓகே சொல்லிவிட்டார். அவரை போல மன உறுதி கொண்ட ஒரு நபரை பார்க்க முடியாது என கூறினார்.