கராத்தே ஹூசைனி என்று அழைக்கப்படும் ஷிஹான் ஹுசைனி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடிகராக தோன்றியுள்ளார்.
கராத்தே மாஸ்டர், வில்வித்தை பயிற்சியாளராக இருந்து வரும் இவர் தற்காப்பு கலைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவர்களில் ஒருவராக திகழ்கிறார்.
மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய புன்னகை மன்னன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, விஜய் என தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும், ஆந்திர துணை முதலமைச்சராக இருந்து வரும் பவன் கல்யாண், ஹூசைனியின் மாணவராக இருந்துள்ளார்.
ரத்த புற்று நோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹூசைனி தற்போது அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இன்னும் சில நாட்கள் மட்டுமே தான் உயிருடன் இருக்கப்போவதாக உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தனக்கு நாள்தோறும் 2 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தன்னை கைவிட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஷிஹான் ஹுசைனி தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவின் மூலம் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்யும் முடிவை அறிவித்தார். தான் மறைந்த மூன்று நாள்களுக்குப் பிறகு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்க வேண்டும். அந்த கல்லூரியின் நிறுவனர் ராமசாமி உடையார், தனது கராத்தே சங்கத்தின் நீண்டகால வழிகாட்டியாக இருந்ததாகவும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தன் உடலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார்.
மேலும், தனது கராத்தே மற்றும் வில்வித்தை மாணவர்களிடம் தனது இதயத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார், இது அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆழமான பிணைப்பைக் குறிக்கிறது. ஒரு வழிகாட்டி, பயிற்சியாளர் மற்றும் போராளியாக எனது மரபு வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கூறினார்.
முன்னதாக, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தளபதி விஜய் தன்னை வந்து சந்தித்து விட்டு செல்ல வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார். தனது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், இந்தத் துறைகளை மேம்படுத்துவதிலும் அவர்களின் ஆதரவை நாடுகிறேன். விளையாட்டு மீதான அவரது அசைக்க முடியாத ஆர்வம் அவரது மாணவர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று கூறியிருந்தார்.
கராத்தே ஹுசைனியின் உடல் நிலை பற்றி அறிந்த திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் அவரை நேரில் சென்று சந்தித்து வருகிறார்கள்.உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ள வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி, தனக்கு உதவக்கோரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதன் பின்னர் ஹூசைனிக்கு அதற்கான காசோலை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஹுசைனியை நேரில் சென்று சந்தித்தார்.
ஹூசைனி தனது கடைசி ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் இன்னும் சில நாள்கள் மட்டும் உயிருடன் இருக்கப்போவதாக கூறும் அவரை பவன் கல்யாண், விஜய் ஆகியோர் உடனடியாக சந்திக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.