சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஓரம் கட்டுகிறாரா சாய் பல்லவி?

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் என தென்னகத்தின் தேவதையாக வலம் வந்த சாய் பல்லவி இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் மாடலிங் செய்த சாய் பல்லவியை ஒரு விளம்பரத்தில் பார்த்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய பிரேமம் படத்தின் மூலம் அவரை ஹீரோயினாக அறிமுகம் செய்தார்.

விஜய், அஜித் என எத்தனையோ முன்னணி ஹீரோக்கள் கேட்டும் அவர்களுடைய படங்களில் சரியான கேரக்டர்கள் கிடைக்காததால் அந்த வாய்ப்புகளை நிராகரித்துள்ளார். அதேபோல் ஒரு அழகு சாதனப் பொருள் தொடர்பான விளம்பரத்தில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்க முன்வந்த போதிலும் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.

நல்ல கதைகளாக மட்டுமே தேர்வு செய்து நடித்துவரும் சாய் பல்லவி, அமரன், தண்டேல் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களிலும் இவருடைய நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. குறிப்பாக அமரன் படத்துக்காக இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் பேசப்படுகிறது.

தற்சமயம் தென்னக மொழிகளில் அசத்தி வரும் சாய்பல்லவி பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து அறிமுகம் ஆக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்துக்காக சாய் பல்லவிக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தென்னக அளவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்ற சிறப்பை சாய் பல்லவி அடைகிறார். இதற்கு முன்பு நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடிக்க ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதை சாய் பல்லவி முறியடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.