தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி நாடு முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்தன. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்தனர். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் சீமான் வரையிலும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் நடிகரும், தவெக தலைருமான விஜய், ”பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ரஜினி இன்று நன்றி கூறியிருந்தார். அவர் வெளியிட்டிருந்த நன்றி அறிக்கையில் ‘அன்புத்தம்பி விஜய்’ என கூறியுள்ளது விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் அன்புத்தம்பி என அறிக்கையில் ரஜினி கூறியிருக்கிறார்.
ரஜினியும், திமுகவும் எவ்வளவு நெருக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே அவர் உதயநிதியை அன்புத்தம்பி என கூறியதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் விஜய்யை அவர் அன்புத்தம்பி என கூறியது விஜய் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் விஜய்க்கும், ரஜினிக்கும் இடையேயான ‘காக்கா கழுகு கதை’ அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இப்படி இரண்டு ரசிகர்களும் பாம்பும், கீரியுமாக இருந்து வரும் நிலையில், ரஜினி ‘அன்புத்தம்பி விஜய்’ என கூறியிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் இதை சிலாகித்து வருகின்றனர். ஐயா திரைப்படத்தில் ஹூரோ சரத்குமார், வில்லன் பிரகாஷ்ராஜை பார்த்து, ”நான் எப்போதும் உன்னை எதிரியாக பார்த்தது இல்லை. என் அண்ணணாகத்தான் பார்க்கிறேன்”என்று கூறுவார்.
இந்த காட்சியை வைத்து விஜய் ரசிகர்கள் போஸ்ட் போட்டு வருகின்றனர். மறுபக்கம் ரஜினி ரசிகர்கள், ”தனக்கு எதிராக யார் என்ன செய்தாலும், பேசினாலும் அதை மனதில் போட்டுக் கொள்ளாமல் அன்பை வெளிப்படுத்துவதே ரஜினியின் பண்பு. அண்மையில் ரஜினியை சீமான் சந்தித்ததும், பாமகவின் அன்புமணி மகள் தயாரிக்கும் படத்தின் டிரெய்லரை ரஜினி வெளியிட்டதுமே இதற்கு சாட்சி” என கூறி வருகின்றனர்.