கூடிய விரைவில் ஹிந்தி படத்தில் நடிப்பேன் : நடிகர் சூர்யா.

தமிழ் திரையுலகை பொருத்தவரை இப்போது டாப் நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்து வருகிறார் நடிகர் சூர்யா. இவர் தமிழ் திரை உலகில் அறிமுகமான புதிதில் பெரிய அளவில் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், மெல்ல மெல்ல தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டு இன்றைய தமிழ் சினிமாவின் டாப் நடிகராக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி ஜோதியாகவும் ஒரு சிறந்த நடிகை என்பது அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள நடிகர் சூர்யா நடிப்பில், இப்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் “கங்குவா”. வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக கங்குவா மாறி இருக்கிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படதோடு இணைந்து அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த தேதியில் இருந்து கங்குவா திரைப்படம் விலகியது.

முதல் முறையாக பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் சூர்யாவின் தம்பி கார்த்திக் நடிக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகை திஷா பட்டாணி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் நடிகர் சூர்யா ஈடுபட்டுள்ள நிலையில், பாலிவுட் திரை உலகில் அவர் களமிறங்க வாய்ப்புகள் இருக்கின்றதா என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு “ஒரு வருடத்திற்கு முன்பே ஒரு பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க நான் தயாராகி விட்டேன். ஆனால் அந்த திரைப்படத்தின் பணிகள் மெல்ல மெல்ல நடந்து வருகிறது. நிச்சயம் அந்த திரைப்படம் விரைவில் உருவாகும்” என்று அறிவித்திருக்கிறார்.

அந்த திரைப்படம் கர்ணா திரைப்படம் என்றும், அந்த படத்தில் பிரபல நடிகை ஜான்வி கபூர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தை ஏற்று நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.