அருண் விஜய் ஹீரோவாக நடித்து வரும் ரெட்டை தல படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படம் 99 சதவீதம் வரை படமாக்கப்பட்டிருக்கும் நிலையில் கடைசி கட்ட சில பேட்ச் ஒர்க் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். கிரிஷ் குமரன் இந்த படத்தை இயக்குகிறார்
தடம் படத்துக்கு பிறகு அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், அவர் நான்கு விதமான லுக்குகளிலும் தோன்றவுள்ளராம். ரெட்டை தல படம் குறித்த அருண் விஜய் கூறியதாவது, “படத்தின் சில பேட்ச் ஒர்க் காட்சிகள்
படமாக்கப்பட்டு வருகின்றன. இயக்குநர் பொதுவாகவே ஸ்பாட்டில் எடிட்டிங் பணிகளை முடித்து விடுவார். தற்போது சில கூடுதல் ஷாட்கள் தேவைப்படுவதால் அதை படமாக்குகிறார்.
இந்த படம் முடிந்தவுடன் எனது தோற்றத்தில் மாற்றம் செய்யவுள்ளேன். இந்த படத்தில் நான் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதையும் மீறி பல்வேறு சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன” என்றார்.
படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை சித்தி இத்னானி கூறியதாவது, “நான் ஆண்ட்ரே என்ற கேரக்டரில் இந்த தலைமுறை பெண்ணாக நடித்துள்ளேன். வாழ்க்கையை பிராட்டிக்கலாக வாழ நினைக்கு போல்டான பெண்ணாக வருவேன். புதுச்சேரி பெண்ணாக வாழ்க்கையில் பல கஷடங்களை சந்தித்து வலிமையான குணத்தை வெளிப்படுத்தும் பெண்ணாக தோன்றுவேன்” என்றார்.
படத்தில் வில்லனாக கன்னட நடிகர் யோகேஷ் நடிக்கிறார். லூஸ் மாட யோகி என்று அறியப்படும் இவர், தமிழில் வில்லனாக அறிமுகமாவதுடன், இவரே தமிழிலும் டப்பிங் பேசியுள்ளார்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கிரிஷ் திருகுமரன். இதன் பிறகு உதயநிதியை வைத்து கெத்து படத்தை இயக்கினார். தற்போது அருண் விஜய்யை வைத்து இயக்கி வரும் ரெட்டை தல படம் குறித்து அவர் கூறியதாவது, “படம் கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. இது எனது கம்பேக் திரைப்படமாக இருக்கும் என நம்புகிறேன். தற்போது படத்தின் சில பாடல் காட்சிகள் மட்டுமே பாக்க இருக்கிறது. பாரிஸில் அதை படமாக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட, பின்னர் சில காரணங்களால் தாமதமாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ், இயக்குநர் மிஷ்கின், சமுத்திரகனி, ராதா ரவி, ஜான் விஜய் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வணங்கான் படத்தின் டைட்டிலுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில், படத்தை வரும் டிசம்பரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக மிஷன்: சாப்டர் 1 படம் வெளியானது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.