குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும் : நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன்

மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ஹேமா கமிட்டி அறிக்கை. கடந்த 2017ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த குழுவினர் கடந்த 2019ல் தங்களது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்ததால் இதன் விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தன.

இந்நிலையில் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கேரளாவின் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் இந்த அறிக்கை குறித்த தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டில் காரில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து ஹேமா என்ற நீதிபதி தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர் இந்த விஷயத்தில் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்டனர். கடந்த 2019ம் ஆண்டிலேயே இதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது தான் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கை கேரளாவில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயத்தில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விஷயங்கள் மலையாள திரையுலகில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் உள்ளதாக நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். இதேபோல இயக்குநர் பிளெஸ்ஸி, தீபா தாமஸ் உள்ளிட்ட பலரும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் மோகன்லால் மற்றும் மம்முட்டி உள்ளிட்ட மூத்த நடிகர்கள் இந்த விஷயத்தில் வாய் திறக்காமல் உள்ளதையும் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு தளங்களில் பயணித்து வரும் பிருத்விராஜ் சுகுமாரன் இந்த விஷயத்தில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரித்விராஜ் சுகுமாரன், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா சரியாக செயல்படவில்லை என்றும் கூறியுள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கை தனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என்றும் அந்த கமிட்டி அமைக்கப்பட்டபோது ஆதரவாக குரல் கொடுத்தவர்களில் தானும் ஒருவன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட சட்டம் அனுமதிக்காது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பிரித்விராஜ் கூறியுள்ளார்.