முதலில் மாடலாக விளம்பரத்துறை உள்ளே நுழைந்து பின்னர் நடிகையாக மாற வாய்ப்பு தேட துவங்கியவர் தான் நடிகை ஜனனி.

ஆரம்பத்தில் ஜனனி ஐயர் என தன்னை அடையாளப்படுத்தி கொண்ட இவர், பின்னர் தன்னுடைய பேரின் பின்னால் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கிவிட்டு அனைவரும் தன்னை ஜனனி என்றே அழைக்கும்படி கூறினார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில், ரிலீஸ் ஆன, ‘அவன் இவன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஜனனி, இதை தொடர்ந்து நடித்த தெகிடி, பலூன் போன்ற சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் தற்போது வரை திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபிக்க போராடி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் வாய்ப்பு கிடைக்கும் என்கிற ஆசையில், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி… பைனலுக்கு முந்தய வாரம் வெளியேற்றப்பட்டார்.

36 வயதை எட்டியுள்ள ஜனனி, தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யுள்ளார். அதன்படி இவர்கள் இருவருக்கும் ஏப்ரல் 11-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

ஜனனியின் காதலர் சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும். அவரின் பெயர் சாய் ரோஷன் ஷான் என்றும் அறிவித்துள்ளார். இவர் ஒரு பைலட் என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில், ஜனனியின் திருமண தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
