எம்புரான் திரைவிமர்சனம்

மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார், பிரித்விராஜ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம்.

லூசிபர் படத்தின் முதல் பாகம் வெளிவந்து மலையாள சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அதன் இரண்டாம் பாகம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம்.

முதல் பாகத்தில் ட்ரக்ஸ் மாபியாவை அழிக்கும் நோக்கத்தில் படம் எடுத்திருந்த பிரித்விராஜ். இந்த பாகத்தில் மத மாபியாவை அழிக்கும் நோக்கத்தில் படம் எடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் கதை எங்கெங்கோ சென்றாலும், இடைவெளியில் ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது. இதன் பிறகு மோகன்லால் தான் ஹீரோவாக இருப்பார் என்று நினைத்தால், அப்பொழுதும் சாமர்த்தியமாக கதை தான் ஹீரோ என்று நகர்த்திச் சென்று இருக்கிறார் இயக்குனர் பிரித்திவிராஜ்.

படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அவ்வளவு பிரம்மாண்டமாக உள்ளன. அதேபோல் வசனமும் மிக தெளிவாக உள்ளன. இவ்வளவு அழகான பிரம்மாண்டத்தையும், நேர்த்தியான வசனத்தையும் கொடுத்த பிரிதிவிராஜ் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தை கொடுத்திருந்திருக்கலாம்.

மோகன்லால் திரையில் வந்தாலே அந்தத் திரை முழுவதும் ஆக்கிரமித்து விடுகிறார். டொவினோ தாமஸ் படத்திற்கு படம் வேறுபட்டு நிற்கிறார். மஞ்சு வாரியார் கனக்கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படி படத்தில் ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பையும் புகழ்ந்து கொண்டே போகலாம்.

இவ்வளவு இருந்தும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தாமல் விட்டதாலோ என்னவோ, இறுதியில் படம் டப்புன்னு முடிந்து விடுகிறது. இதனால் படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் லூசிபர் முதல் பாகத்தை போல் இது இல்லையே என்று தோன்ற வைக்கிறது.

மேலும் மூன்றாம் பாகத்திற்கான லீட் கொடுத்திருப்பது சிறப்பு.

ஆக மொத்தத்தில் எம்புரான் படம் பிரம்மாண்டத்திற்காக பார்க்க வேண்டிய ஒரு தரமான படம்.