தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன், அருண் விஜய் நடிக்கும் இட்லிக்கடை திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகாது என தகவல் வெளியாகி உள்ளது.
கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பை தாண்டி படம் இயக்குவதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன ராயன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து புது முகங்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற ரோம்-காம் திரைப்படத்தை இயக்கி இருந்தார் தனுஷ்.
நீக் திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. ஆனால் இப்படம் வசூலில் பலத்த அடிவாங்கி தோல்வியை சந்தித்தது. நீக் படத்தின் தோல்வியை சந்தித்தாலும் இயக்குனராக கம்பேக் கொடுக்க தனுஷ் இயக்கத்தில் மற்றுமொரு படமும் தயாராகி வருகிறது. அப்படத்தின் பெயர் இட்லிக்கடை. அப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தை இயக்குவது மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இட்லிக்கடை படத்தை வருகிற ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. அதன்பின்னர் அண்மையில் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இட்லிக்கடை தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாங்களும் அதே தேதியில் வெளியிட உள்ளதை அருண் விஜய்யின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருந்தனர்.

ஆனால் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இட்லிக் கடை படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவடையாததால், வேறு வழியின்றி அப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளாராம் தனுஷ். இதனால் ஏப்ரல் 10ந் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆக உள்ளது. ஏப்ரல் மாதம் ரிலீஸில் இருந்து தள்ளிப்போகும் இட்லிக்கடை திரைப்படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தான் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக தனுஷ் நடித்த குபேரா படம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
