நடிகர் சிம்பு 6 மாத குழந்தையாக இருந்தபோதே தன்னுடைய நடிப்பை துவங்கியவர். ஆறு மாத குழந்தையாக தன்னுடைய அப்பாவும் பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான டி ராஜேந்தர் இயக்கத்தில் படங்களில் நடித்துள்ளார் சிம்பு. தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவும் ஹீரோவாகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் சிம்பு, 40 வயதான நிலையிலும் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டி வருகிறார். முன்னதாக இவர் சூட்டிங்கிற்கு குறித்த நேரத்திற்கு வரமாட்டார் என்பது உள்ளிட்ட பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது தன்னுடைய நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்தியுள்ளார் சிம்பு.
இடையில் சில காலங்கள் இவரது படங்கள் சிறப்பாக அமையாத நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் சிம்புவிற்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படம் டைம் லூப் பாணியில் உருவாகியிருந்த நிலையில், சிம்புவிற்கு மிகச்சிறப்பான ரீ என்டரியாக இந்தப் படம் அமைந்தது. தொடர்ந்து கௌதம் மேனனுடன் வெந்து தணிந்தது காடு படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை ஹிட்டாக்கிய சிம்பு, அடுத்ததாக பத்து தல படத்தையும் ஓரளவு வெற்றிப்படமாக கொடுத்து, அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றிக்கு சொந்தக்காரரானார். இதனிடையே அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் இணைந்திருந்தார்.
வரலாற்று பின்னணியில் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியான நிலையில், படத்தில் ஹீரோவும் வில்லனும் என இருவேறு கெட்டப்புகளில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்தப் படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில், இந்தப் படத்திலிருந்து கமல்ஹாசனின் RKFI விலகியுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்தப் படத்தை நடிகர் சிம்புவே தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது தன்னுடைய புதிய படம் குறித்து சிம்பு சமூக வலைதளப்பக்கத்தில் புதிய அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
தன்னுடைய பதிவில் தம் + மன்மதன் + வல்லவன் + வெந்து தணிந்தது காடு படங்களை Gen Z மோடில் தனது அடுத்த படமாக எடுக்கவுள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தற்போது கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரது எஸ்டிஆர் 48 படம் சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறொரு படத்திற்கான அறிவிப்பை அவர் மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் குறித்த அறிவிப்பை சிம்பு விரைவில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படம் அவரது தயாரிப்பில் உருவாகுமா என்பது குறித்தும் விரைவில் தெரியவரும்.