கலைத்துறையில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
என்.எஃப்.டி.சி என்று அழைக்கப்படும் இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம், ஆண்டுதோறும் இந்திய அளவில் கலைத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்காக தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இதில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் என்று பல்வேறு துறையை சார்ந்த கலைஞர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் தான் சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் 70 வது தேசிய விருது வழங்கும் விழாவில் விருது பெற உள்ளவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது.
இதுவரை யாரும் படைத்திடாத ஒரு புதிய சாதனையாக, இசைத்துறையில் ஏழு தேசிய விருதுகளை வென்ற ஒரே கலைஞன் என்கின்ற பெருமையை இன்று ஏ.ஆர் ரகுமான் பெற்றிருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இசையமைப்பதற்காக அவருக்கு இந்த தேசிய விருது கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பல்வேறு துறையை சேர்ந்த திரையுலக கலைஞர்கள் இந்த தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதேபோல திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம்பெற்ற “மேகம் கருக்குதா பெண்ணே பெண்ணே” என்கின்ற பாடலுக்காக பிரபல நடன இயக்குனர் ஜானி மற்றும் சதீஷ் மாஸ்டர் ஆகிய இருவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்பு தான் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி, ஜானி மாஸ்டர் சிறைக்கு சென்றார். பல சர்ச்சையான கருத்துக்கள் இதுகுறித்து தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், கடந்த வாரம் தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ஜாமீனுக்கு விண்ணப்பித்த அவருக்கு ஜாமினும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தேசிய விருது வழங்கும் விழாவிற்காக அவர் தயாராகி வந்த நிலையில் தான், அவருக்கு வழங்கப்பட விருந்த விருது நிறுத்தி வைக்கப்படுவதாகவும். இந்திய அரசிடமிருந்து அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பிதழும் ரத்து செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற 70வது தேசிய விருது வழங்கும் விழாவில், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம்பெற்ற “மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே” என்ற பாடலுக்காக ஜானி மாஸ்டர் இல்லாமல் தனியாக சதீஷ் மாஸ்டர் மட்டும் அந்த விருதை பெற்றுக் கொண்டார்.
