ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்த பின்னரே படத்தை வெளியிட வேண்டும்: தங்கலான் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.
சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் விஐபி-க்களிடம் பெற்ற பணத்தை பலருக்கு கடனாக வழங்கியிருந்தார்.
அவர் மரணம் அடைந்ததால், அவரது சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லாலிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்தத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், அர்ஜூன்லாலிடம், ஸ்டூடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013 ஆம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
அந்த தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்காததால், இருவரையும் திவாலானவர்களாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், தங்கலான் படத்தை வெளியிடும் முன்பு ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், அதன்பிறகு படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டனர்.
இதேபோல, அடுத்த படமான கங்குவா படத்தை வெளியிடும் முன்பும் ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், பட வெளியீட்டிற்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.