வராக ரூபம் பாடல் சர்ச்சை; பதிப்புரிமை பெற்ற ப்ரித்விராஜுக்கு கேரளா கோர்ட் போட்ட உத்தரவு;

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

கன்னடத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

இதனிடையே காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான “வராக ரூபம்” கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான “தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின்” நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில் கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது நம் அனைவரும் அறிந்த ஒன்றே.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து ஓடிடி தளத்தில் வராக ரூபம் பாடல் இடம்பெறாமல் தான் காந்தாரா திரைப்படம் வெளியானது. அதன்பின்னர் இந்த பாடலுக்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கில் தயாரிப்பாளர் விஜய் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கு கேரளா உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உதவிட்டது. அத்துடன் வராகரூபம் பாடல் இடம்பெறாமல் படத்தை திரையிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.

இந்த நிபந்தனையை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் காந்தாரா படத்தின் கேரளா விநியோக உரிமையை பெற்றிருந்த பிருத்விராஜ் சுகுமாரன் மீது தொடரப்பட்ட பதிப்புரிமை மீறல் தொடர்பான வழக்குக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.