75ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் வேட்டுவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.
இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் அவரே தெரிவித்திருந்தார். ஆனால், அப்படம் விக்ரம் படமா, கமல் படமா என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், இது அட்டகத்தி தினேஷ்க்காக எழுதிய கதை என்று பா.ரஞ்சித்தே தெரிவித்திருந்தார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் ஆக்சன் காட்சி எடுத்தபோது எதிர்பாராதவிதமாக ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மோகன் மரணத்தை கேட்டு திரை பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பாய்ந்தது. மேலும், ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் மங்காத்தா, விடாமுயற்சி, கோட், போன்ற படங்களுக்கும் கார் ஸ்டண்ட் செய்துள்ளார். படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர்கள் உயிரிழப்பது முதல் முறை இல்லை என்றாலும் அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் பின்னர் வேட்டுவம் படக்குழுவினர் மோகன் ராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பா.ரஞ்சித் பாதுகாப்பு இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியிருக்க மாட்டார். எந்த இயக்குநர்களும் அப்படி இருக்க மாட்டார்கள் என்றும் ஆதரவாக சினிமா பிரபலங்கள் பேசி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் மோகன் ராஜ் அண்ணனின் மரணம் உள்ளத்தை உலுக்கிவிட்டது. மீளா துயரில் இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை, தமிழக அரசு போதிய நிவாரணம் வழங்கினால் அவர்களது குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று இயக்குநர் செல்வமணி கோரிக்கை வைத்தார். இந்த சூழலில், நடிகர் சூர்யா கடந்த 10 வருடங்களாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டி வருவதாக ஸ்டண்ட் சில்வா தெரிவித்தார். இதுதாெடர்பான வீடியோவும் வைரலானது. இந்த விபத்தை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்சய் குமாரும் 100 பேருக்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளார் என்ற செய்தியும் வைரலானது.
மேலும், நடிகர் விஷால் மோகன் ராஜ் பிள்ளைகளின் படிப்பு செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன் அறிவித்தார். ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சங்கம் இருப்பினும் முறையான காப்பீடு கிடைப்பதில்லை என்ற வேதனையில் இருக்கின்றனர். இந்நிலையில், மோகன் ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் நிதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.