இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான தக் லைஃப் படம் வரும் ஜூன் மாதம், 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது மே 24ஆம் தேதி சென்னை புறநகர் பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார், சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, நான் சிறு வயதில் இருந்தபோது எங்கள் வீட்டிற்கு எனது அப்பாவைப் பார்க்க கமல் சார் வந்திருந்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன். என்னைப் பார்த்ததும் யார் என்று கேட்டார். அதற்கு எனது அப்பா எனது மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார். உடனே கமல் சார் என்னை கட்டிப்பிடித்தார். நான் அதன் பின்னர் மூன்று நாட்கள் குளிக்கவே இல்லை.
மேலும் அவர் கூறும் பொழுது, மணி ரத்னம் படம் என்றாலே நான் முதல் நாளே படத்தைப் பார்த்து விடுவேன். இப்படி இருக்கும்போது, இந்த படத்தை நான் மிஸ் செய்ய மாட்டேன். கமல் சாருக்காக நான் ஒரு பாடல் பாடுகிறேன் என்று கூறிய சிவராஜ்குமார், கமல்ஹாசனின் “ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது” பாடலைப் பாடினார். ஏ.ஆர் ரகுமான் மேடையில் இளையராஜா பாடலை சிவராஜ்குமார் பாடியது குறித்த தகவல் திரையுலகில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் சிம்பு குறித்து பேசும்போது, சிம்பு எப்போதும் லிட்டில் சூப்பர் ஸ்டார்தான். அவர் தனக்கென தனி ஸ்டைலை தனது சினிமாக்களில் பின்பற்றி வருகிறார். த்ரிஷா எனது சகோதரர் புனித் உடன் நடித்துள்ளார். நான் சுகாசினி மேடமுடன் நடித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.