நிஜமாகவே கவுண்டமணியின் எழவு வீட்டில் சிரித்தாரா நடிகர் விஜய்?

தமிழ் சினிமாவின் இன்றியமையாத காமெடி நடிகர் கவுண்டமணி. இவருடைய மனைவி சாந்தி. இந்தத் தம்பதியினருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.

இவரது திடீர் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் கவுண்டமணியின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், கவுண்டமணியை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த நிலையில், கவுண்டமணியின் மனைவிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு விஜய் தனது காரில் ஏற சென்றபோது, அவர் சிரித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோவும், புகைப்படங்களும் பரவி வருகிறது.

ஒரு துக்க வீட்டில் கலந்துகொண்டு விட்டு இப்படி சிரிக்கலாமா என்று பலரும் தங்களது விமர்சனங்களை முன் வைக்கின்றனர். ஆனால், கவுண்டமணியே விஜயை சந்தித்தபோது லேசாக புன்னகைத்தார் என்று அவரது ரசிகர்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே கவுண்டமணி வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்ற போது ஒருவர் லேசாக அவரது காலை மிதித்து விட்டார். இருப்பினும், அவர் சாதாரணமாக காரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒருவர் பாட்ஷா நீ தான் கால மிதிச்சிட்ட உன் மேல கேஸ் போட போறாங்க என சொன்னார். இதைக் கேட்டு விஜய் லேசாக புன்னகைத்து விட்டு சென்றார்.