சினேகன் கன்னிகா ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது!

பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள தகவலை, அவர்களே புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹாட் பாடல்களை எழுதி தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியர்களில் ஒருவராகவும், தனக்கென தனி இடத்தையும் பிடித்தவர் சினேகன். இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதியுள்ள சினேகன் பாடல் ஆசிரியர் என்பதை தாண்டி யோகி, உயர் திரு 420, கோமாளி, பூமி, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களில் நடித்தும் உள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியில் விளையாடி ஃபைனலிஸ்ட்டில் ஒருவராக மாறினார். பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக கிடைக்காத நிலையில், தற்போது உலக நாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேத்தலிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, டெபாசிட் இழந்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு, பிரபல சின்னத்திரை நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகன். திருமணத்திற்கு பின் பலரும் பொறாமை கொள்ளும் ஜோடியாக வாழ்ந்து வந்த இவர்கள், தற்போது தங்கள் காதலின் அடையாளமாக இரண்டு தேவதைகளுக்கு பெற்றோராக மாறி உள்ளனர். ஆம் சினேகனின் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து கன்னிகா மற்றும் சினேகன் ஜோடிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து சினேகன் கூறுகையில்,

“இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன்
மகளாய் மாற “… என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது…

தாயே எந்தன் மகளாகவும் ..
மகளே எந்தன் தாயாகவும் …
இரு தேவதைகள் பிறந்திருக்கிறார்கள் …

இதயமும்,மனமும்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
நிரம்பி வழிகிறது …

உங்களின் தூய அன்பினால்
எங்கள் வாரிசுகளை
வாழ்த்துங்கள்.

என்றும் அன்புடன்
சினேகன்
கன்னிகா சினேகன் .