ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்தவித ரோல் கொடுத்தாலும் அதில் அசால்டாக நடித்து அப்ளாஸ் வாங்குபவர் சத்யராஜ். இவருக்கு கடந்த 1979-ம் ஆண்டு திருமணம் ஆனது. மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்ட சத்யராஜுக்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் தன் தந்தையை போலவே சினிமாவில் ஹீரோவாக இருக்கிறார். மறுபுறம் சினிமா பக்கமே தலைகாட்டாமல் உள்ள சத்யராஜின் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார்.
சத்யராஜின் மகள் திவ்யா கடந்த சில வாரங்களுக்கு முன் தன் தாய் குறித்து உருக்கமாக பதிவிட்டு இருந்தார். அதன்படி சத்யராஜின் மனைவி மகேஸ்வரி, கடந்த நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்ததோடு, தன் தந்தை ஒரு சிங்கிள் பேரண்டாக இருந்து தங்களை பார்த்துக்கொண்டிருப்பதாக கூறி இருந்தார். சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கும் தகவல் அறிந்த பலரும் அவருக்கு ஆறுதலாக பதிவிட்டு வந்தாலும், ஒரு சிலர் நெகடிவ் கமெண்ட்டுகளையும் போட்டு வந்தனர்.
நடிகர் சத்யராஜ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அதுமட்டுமின்றி பெரியாரை பின் தொடர்பவர் என்பதால், அவர் இப்படி கடவுளை திட்டி பல மேடைகளில் பேசியதால் தான் அவர் மனைவி இப்படி கோமா நிலையில் இருப்பதாக கூறி சிலர் தரக்குறைவாக கமெண்ட் செய்திருந்தனர். இதனை அண்மையில் ஜீப்ரா படத்தின் புரமோஷனுக்காக வந்திருந்த நடிகர் சத்யராஜிடம் தொகுப்பாளர் ஓப்பனாகவே கேட்டார். அதற்கு தன் பாணியில் தக் லைஃப் பதில் ஒன்றை கொடுத்துள்ளார் சத்யராஜ்.
அதன்படி அவர் கூறியதாவது : “ஏன் சாமி கும்பிடுறவன் வீட்ல எவனும் சாகலையா.. லூசு பசங்களா இருக்கானுங்க. சாமி கும்பிடுவதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. சாமி கும்பிடுபவர்கள் வீட்டில் யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போவதில்லையா… காய்ச்சல் வருவதில்லையா, தலைவலி வருவதில்லையா, விபத்தில் சிக்கியதில்லையா, தற்கொலை செய்ததில்லையா? குடும்பத்தோட கோவிலுக்கு போறவர்கள் வேன் கவிழ்வதில்லையா? இதுமாதிரி உளறுபவர்கள் உளறிக்கொண்டே இருப்பார்கள். அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை” என கூறி இருக்கிறார்.