ஹேமா கமிட்டி அறிக்கை: கோபத்தில் கொந்தளித்த சுரேஷ் கோபி

ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாளத் திரை உலகில் நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக நடிகர் சங்கமான ‘அம்மா’ தலைவர் மோகன்லால் தலைமையில் ஆலோசனையும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த விவகாரத்தை வைத்து ஊடகங்கள் பணம் சம்பாதிப்பதாக கோபம் கொப்பளிக்க பேசியிருக்கிறார் நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி.

மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பாக மலையாள நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான கொடுமை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இதில் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வல்சலா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகைகள் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் இந்த கமிட்டி விசாரணை நடத்தியது.

தொடர்ந்து 60க்கும் மேற்பட்டோர் திரை உலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள் புறக்கணிப்புகள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். 2019ஆம் ஆண்டு இந்த குழு தனது அறிக்கையை கேரள முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது. ஆனால் பல ஆண்டுகளாக அது வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் உரிமை ஆணையத்தின் மூலம் இந்த அறிக்கை வெளியானது.

அதில் பல நடிகைகள் பெண் கலைஞர்களுக்கு பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றதாகவும், பாலியல் இச்சைக்கு அழைக்கும் நடிகர்கள் இயக்குனர்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகள், பெண் தொழில்நுட்ப பணியாளர்கள் மலையாள சினிமாவில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதை அடுத்து மலையாள நடிகர்கள் இயக்குனர்கள் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலையாள சினிமா அகடமி தலைவரும் பிரபல இயக்குனருமான ரஞ்சித், தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார் .

அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகை நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மீதும் அடுத்தடுத்து புகார் குவிந்து வரும் நிலையில், இது தொடர்பாக மலையாள நடிகர் சங்கமான அம்மா தலைவர் மோகன்லால் தலைமையில் ஆலோசனையும் நடைபெற்றது. ஆனால் இது தொடர்பாக இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் கோபம் கொப்பளிக்க பேசியிருக்கிறார் நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி. செய்தியாளர் சந்திப்பின்போது நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்,”எங்கே எந்த கேள்வியை கேட்க வேண்டும் என தெரியாதா? என கோபம் கொப்பளிக்க பேசினார்.

மேலும் கேரளாவில் நடிகர்கள் மீதான புகார் குற்றச்சாட்டு என்ற அளவிலேயே உள்ளது. யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மேலும் சினிமா என்பது லட்சக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழில். சினிமா போன்ற மிகப்பெரிய ஒரு தொழிலை அழிக்க முயற்சி செய்யக் கூடாது. நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஊடகங்கள் அதனை செய்கிறது. ஊடகங்களுக்கு தீனி கிடைத்திருக்கிறது. ஊடகங்கள் இதை வைத்து பணம் சம்பாதிக்கிறது” என பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.