தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தெகிடி, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்றுவந்த நடிகர் பிரதீப் விஜயன் சென்னையில் காலமானார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் துணை நடிகராக நடித்துவந்த பிரதீப், கேரக்டர் ரோல்களிலும் காமெடி கேரக்டர்களிலும் நடித்து வந்தார்.
சென்னையில் பிரதீப் விஜயன் தனியாக வசித்து வந்த நிலையில் தற்போது அவர் மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் பிரதீப் விஜயன்: நடிகர் பிரதீப் விஜயன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் துணை நடிகராக தொடர்ந்து நடித்து வந்தவர். சென்னையில் பிறந்த இவர், 10 ஆண்டுகளை கடந்து படங்களில் கேமியோ கேரக்டர்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் இவர் மாரடைப்பால் காலமானார். சென்னையில் தன்னுடைய வீட்டில் தனியாக வசித்துவந்த பிரதீப்பின் வீடு கடந்த இரு தினங்களாக திறக்காத நிலையில், அவரை தொலைபேசி மூலம் அவரது நண்பர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்து வந்தனர். ஆனால் அவர் போனை எடுக்காதநிலையில், அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் காவல்துறையினர் உதவியுடன் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தனர்.
பூட்டிய வீட்டிற்குள் மரணம்: அப்போது பிரதீப் விஜயன் அவரது வீட்டில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அவருக்கு மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு என்ன நோய் பாதிப்பு இருந்தது என்பது குறித்து தகவல்கள் இல்லை. தமிழில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தெகிடி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற பிரதீப் விஜயன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பல படங்களில் முன்னணி கேரக்டர்களில் நடித்து வந்துள்ளார். டெடி, லிப்ட், நெற்றிக்கண், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களிலும் கவனிக்கத்தக்க கேரக்டர்களில் இவர் நடித்துள்ளார்.
திரையுலகினர் அதிர்ச்சி: தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ள பிரதீப் விஜயனின் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு தற்போது திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சில வெப் தொடர்களிலும் குறும்படங்களிலும்கூட இவர் நடித்துள்ளார். தனக்கு இப்படிப்பட்ட கேரக்டர்தான் வேண்டும் என்று நினைக்காமல் கிடைத்த கேரக்டர்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார் பிரதீப். கவினுக்கு வெளிச்சத்தை கொடுத்த லிப்ட் படத்திலும் க்ளைமாக்சில் ஒரே ஒரு சீனில் மட்டுமே காணப்படுவார். அதில் கவினிடம் கேவலமாக திட்டு வாங்கிக் கொண்டே சிரிக்கும் இவரது கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்: சமீப காலங்களில் திரையுலகில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிகமானோர் மாரடைப்புகளால் உயிரிழப்பதை பார்க்க முடிகிறது. தனியாக இருந்த பிரதீப் விஜயன், இறந்து இரண்டு நாட்கள் தன்னுடைய வீட்டிலேயே இருந்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவரது வீடு உடைத்து பார்க்கப்பட்டுள்ளது. தனியாக வசிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதீப் விஜயன் தற்போது அனைவருக்கும் புலப்படுத்திவிட்டு சென்றுள்ளார்