சாமானியன் திரை விமர்சனம்

சாமானியன் கை கொடுத்தானா..? கை விட்டானா..?

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர்தான் ‘மக்கள் நாயகன்’ ராமராஜன். கிட்டத்தட்ட 20 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகனாக உருவெடுத்து இருக்கும் படம் தான் சாமானியன். இந்தப் படத்தை  ‘தம்பிக்கோட்டை’ படத்தை இயக்கிய இயக்குனர் ராகேஷ் இயக்கியிருக்கிறார்.

 

சென்னையின் முக்கியமான இடத்தில் ஒரு பிரபலமான வங்கி மிகவும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறது. அந்த வங்கியை கொள்ளையடிக்க வேண்டும் என்று மூன்று இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் திட்டமிடுகிறார்கள். அடுத்த நாள் அந்த வங்கியை கொள்ளை அடிக்கலாம் என்று முடிவோடு இருக்கிறார்கள்.

 

இன்னொரு பக்கம் ராமராஜன் தன்னுடைய பேத்தியின் பிறந்தநாளுக்காக சென்னை வந்திருக்கிறார் . வந்தவருக்கு அவருடைய பாலிய சிநேகிதனான ராதாரவி அடைக்கலம் தருகிறார். அவருக்கு எந்த ஒரு தொழில்நுட்பமும் தெரியாத காரணத்தினால், பேத்தியின் பிறந்த நாளிற்காக பணத்தை எடுப்பதற்காக கேமராமேன்னை அழைத்துக் கொண்டு பேங்கிற்கு செல்கிறார்.

 

கொள்ளையடிக்கும் கும்பல் ஒரு பக்கம் வரும் அதே வேளையில், ராமராஜன் அந்த பேங்க் அனைத்தையும் டைம்பாம் மற்றும் துப்பாக்கி வைத்து hijack பண்ணி விடுகிறார்.

 

இவை அனைத்தும் மீடியாவுக்கு தெரியவர மீடியாவும், காவல்துறையினரும் அவரைச் சுற்றி வளைக்கின்றனர். இதிலிருந்து அவர் எப்படி தப்பித்தார்? எதற்காக அவர் இந்த பேங்கை hijack பண்ணினார் என்பது படத்தின் கதை.

 

சமூக அவலங்களைப் பேசும் இந்த படம் ஒரு முக்கியமான கதை கருவை மையப்படுத்தி சொல்கிறது. வீட்டுக் கடன் என்ற பெயரில் ஒவ்வொரு வங்கிக்காரர்களும்  எந்த மாதிரியான அணுகு முறையை கையாளுகிறார்கள் என்பதை புடம் போட்டு காட்டுகிறது.

 

ராமராஜனுக்கு வயதாகி விட்ட காரணத்தினால் வசன உச்சரிப்பில் ஒரு தோனி இல்லாமல் போவது நிதர்சனம். மிகவும் கஷ்டப்பட்டு பேசுகிறார். அவரது நண்பர்களாக வரும் ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் இருவருமே தாங்கள் நடிப்பில் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனர்.

 

படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களான போஸ் வெங்கட், கே எஸ் ரவிக்குமார், Mime கோபி ஆகியோர் தங்களுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

 

ஒரு கதைக்கரு அழகாக இருக்கும் பட்சத்தில் அதன் திரைக்கதை ஆழமாக இருந்தால் படம் இன்னும் சூப்பராக இருந்திருக்கும். ஆனால் இந்தப் படத்தின் முதல் பாதி ஆமை வேகத்தில் நகர்வதால் ஒரு பெரிய சலிப்பைக் கொடுக்கிறது. இரண்டாம் பாதியில் கதைகள் சொன்னாலும் பிளாஷ் பேக் என்ற பெயரில் படம் முழுக்க இரண்டாம் பாதியை ஆக்கிரமித்து விடுகிறது. ஒரு கட்டத்தில் முதல் பாதி என்ன கதை என்பதே ஆடியன்ஸ்க்கு மறந்து விட்டது என்று கூறலாம்.

 

படம் முடிந்ததும் இறுதிக் காட்சியில் , சுவாரசியமான காட்சி எடுக்கிறேன் என்ற பெயரில்  நூலகத்தில் ஒரு காட்சி இருக்கும், அதுவரை அந்தப் படத்தின் மேல் வைத்திருந்த மிகப்பெரிய மரியாதையை அந்த ஒரு காட்சி கெடுத்து விட்டது. இயக்குனர் படத்தில் பரபரப்பை கூட்ட வேண்டும் என்பதற்காக காட்சிகளை திணித்திருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜனுக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். வழக்கம்போல் இசையில் ராஜா ராஜா தான்.

 

இந்தப் படத்தைப் பார்க்கும் முன்பு வரை  பேங்கை ஹைஜாக் பண்ணுவது இவ்வளவு சுலபம் என்று எங்களுக்கு அதுவரை தெரிந்திருக்கவில்லை. இது மாதிரி லாஜிக் அபத்தங்கள் நிறையவே உள்ளன. அது பட்ஜெட் குறைபாட்டினாலா..? அல்லது திரைக்கதையின் குறைபாட்டினாலா ..?  என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

 

ஆக மொத்தத்தில்  சாமானியன் எங்களைப் பொறுத்தவரையில், மைய கருவிற்காகவே பார்க்க வேண்டிய ஒரு படம்.