புதிய தயாரிப்பு நிறுவனமான ருத்ரம் சினிமாஸ், தனது முதலாவது திரைப்படமாக சிங்காவை அறிவித்துள்ளது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான அன்பும் பிணைப்பும் மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக படம் உருவாகியுள்ளது.
சிங்காவை இயக்கும் ராஜா துரை சிங்கம், இயக்குநர்கள் வசந்த் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையில் உணர்ச்சி, நம்பிக்கை, காதல் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் படைப்பாக இந்த படம் இருக்கும் என தயாரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கயல் சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சிஜா ரோஸ், மீனாட்சி (மலையாளம்), ஆதித்யா கதிர், மலையாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் உள்ளிட்டோர் இணைகின்றனர். இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு அசோக் குமார்ராஜ்.
கதையின் மையத்தில் இருக்கும் சிங்கா என்ற லாப்ரடார் நாய், பார்வையாளர்களை உணர்ச்சிப்பூர்வமாக இணைக்கும் முக்கியக் கதாபாத்திரமாக வரவுள்ளது. மனிதனுடன் பகிரப்படும் நட்பு, நம்பிக்கை, அன்பு ஆகியவை எவ்வாறு வாழ்க்கையின் பயணத்தை வளமாக்குகின்றன என்பதைக் கதை வெளிப்படுத்துகிறது.
தற்போது படத்தின் முதல் பார்வை (First Look) வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் படம் சிறப்பான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.