கோலிவுட்டின் டாப் கதாநாயகனாக விளம்பரம் அஜித் குமார், பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் தனது அணியோடு கலந்துகொண்டு பல சாதனைகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அஜித்குமார், தனது கெரியர் குறித்து பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“அடுத்த 6 வருடங்களுக்கு என்னுடைய பார்வையை பகிர்ந்துகொள்ள எனக்கு பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் நான் அதிர்ஷ்டம் உடையவன். இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தரத்துடன் கூடிய திரைப்படங்களை நீங்கள் பார்ப்பீர்கள்” என அப்பேட்டியில் கூறிய அஜித்குமார்,
“எனது அடுத்த திரைப்படத்தை 2025 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்குகிறேன். அத்திரைப்படம் 2026 கோடை விடுமுறையை ஒட்டி வெளிவரும்” எனவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், “சினிமா, கார் ரேஸ் ஆகிய இரண்டுடனுமே நான் நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்று நான் உணர்ந்தேன். அதனால் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ஆதலால் கார் பந்தயங்களில் கலந்துகொள்ளும் சமயங்களில் திரைப்படங்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்தேன்” என்றும் அஜித்குமார் கூறியுள்ளார்.
அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டன. எனினும் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.