ஐபிஎல் 2025-ன் 43ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி, சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னையைச் சேர்ந்த சி.எஸ்.கே ரசிகர்கள் பலர் மைதானத்தில் போட்டியைக் காண குவிந்துள்ளனர்.
இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன. இந்த சீசனில் இரு அணிகளும் மோசமான ஆட்டத்தைக் கொண்டுள்ளன.
ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கே, தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. மேலும் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறிய பிறகு எம்எஸ் தோனி கேப்டனாக மீண்டும் வந்த போதிலும், அவர்கள் தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. சி.எஸ்.கே இன்றைய ஆட்டம் உட்பட ஆறு ஆட்டங்களை ஆடுகிறது.
ஆனால், ஒவ்வொரு போட்டியும் சி.எஸ்.கேவுக்கு போராட்டம் நிறைந்தது. ஏனெனில், சி.எஸ்.கே தற்போது நான்கு புள்ளிகளை மட்டுமே கொண்டு 10ஆவது இடத்தில் இருக்கிறது.
சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரையில், எட்டு ஆட்டங்களை ஆடி, நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்று 9ஆவது இடத்தில் இருக்கிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சிலர் முக்கியமாக இருந்தபோதிலும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி ரன்கள் எடுக்கவும், விக்கெட்டுகளை வீழ்த்தவும் போராடி வருகிறது.
இந்தப் போட்டியைக் காண தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி, அவர்களது மகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோர் வந்திருந்தனர். குறிப்பாக, இன்று அஜித் மற்றும் ஷாலினியின் 25ஆவது திருமண நாள் என்பதால், இப்போட்டியைத் திட்டமிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் தான் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியைக் காண வந்திருந்தனர். அப்போது தற்செயலாக சிவகார்த்திகேயன், நடிகர் அஜித்தை பார்க்க அவரை வாழ்த்தச் சென்றிருக்கிறார்.
இதை சற்றும் எதிர்பாராத அஜித், சிவகார்த்திகேயனை தன் அருகில் அமரவைத்துக்கொண்டு, போட்டியைக் கண்டு ரசித்தார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் தற்போது வைரல் ஆகியுள்ளன.