பஹல்காமில் நடந்த பிரச்சனை இந்து முஸ்லிம் பிரச்சனையே கிடையாது: தைரியமாக பேசிய காஜல் அகர்வால்!

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள், நடிகர் – நடிகைகள், விளையாட்டுப் பிரபலங்கள் என பலரும் தங்கள் எதிர்ப்புகளையும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல, நடிகை காஜல் அகர்வாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஹிந்து மற்றும் முஸ்லீம் இடையேயான பிரச்னை கிடையாது. ஆனால், சில வெறுப்பாளர்கள் அதைத்தான் விரும்புகின்றனர்.

இது பயங்கரவாதம் மற்றும் மனிதநேயத்துக்கு இடையேயான மோதல். ஒரு பெயரின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம். பிரிவினை என்பது அதிக பயத்தையும், இருதரப்பினருக்கு எதிரான பிரிவு உணர்வை மட்டுமே உருவாக்கும். நாம் ஒரே இனம் என்ற உணர்வு இருக்க வேண்டும். முன்பு இருந்ததைவிட இப்போது நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஹிந்து – முஸ்லீம் இடையேயான பிரச்சினை குறித்து தைரியமாக பேசியுள்ளதாக நடிகை காஜல் அகர்வாலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.