காமெடி நடிகராக இருந்து, ஹீரோவாக மாறுவது என்பது எளிதான காரியம் அல்ல. அப்படியே ஹீரோவாக நடித்தாலும், காமெடியனாக இருக்கும் ஒருவரை ரசிகர்கள் எளிதில் ஹீரோவாக ஏற்று கொள்ள மாட்டார்கள்.
ஆனால் அதற்கான கதைக்களம் அமைந்தால் மட்டுமே இது சாத்தியம் . அப்படி ஒரு தரமான கதை களத்தில் ஹீரோவாக நடித்து, இன்று அடுத்தடுத்து பல படங்களில் கதையின் நாயகனாக நடிக்க துவங்கியுள்ளார் சூரி.
இவர் நடித்த ‘விடுதலை 2′ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சூரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இப்போது போடப்பட்டுள்ளது. விலங்கு வெப் சீரிஸ் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இந்த படத்தை இயக்க, கருடன் படத்தை தயாரித்த நிறுவனம் தான் சூரியை வைத்து மீண்டும் இந்த படத்தை தயாரிக்கிறது.
மாமன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை இன்று (டிசம்பர் 16) திருச்சியில் பிரமாண்டமாக நடந்த நிலையில், நடிகர் சூரி மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவினரும் இதில் கலந்து கொண்டனர். இந்த படத்தில் இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சூரிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சூரி கையில் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல் உள்ளது.
மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் – நடிகைகளின் தேர்வு தற்போது நடந்து வருவதாக படக்குழு அறிவித்தது. கிராமத்து கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. விலங்கு வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சூரி நடிக்கும் படம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு கூடியுள்ளது.