கருடன் திரைவிமர்சனம்..!

அமைச்சரான ஆர் வி உதயகுமார், தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான, சென்னையில் உள்ள சுமார் 300 கோடிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். அதற்கு அவருக்கு அந்தக் கோவிலின் பட்டைய பத்திரம் தேவைப்படுகிறது. இதற்காக தியேட்டர்காரனாக வரும் லோக்கலில் உள்ள Mime கோபியை அணுகுகிறார். ஆனால் வாழையடி வாழையாக, அந்தக் கோவில் பட்டயம் நகைகள் எல்லாத்தையும், அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி அம்மா தான் பாதுகாத்து வருகிறார்.
அவருடைய பேரன் உன்னி முகுந்தன், மற்றும் சசிகுமார் பாலிய காலத்து நண்பர்கள். கோவில் திருவிழா மற்றும் பராமரிப்பு பணிகளை இருவருமே பார்த்து வருகின்றனர். அனாதையாக இருக்கும் சூரியை, சின்ன வயதில் இருந்து உன்னி முகுந்தன் தன் வீட்டில் வைத்து அரவணைத்து வருவதால், சூரி உன்னி முகுந்தனுக்கு உண்மையான விசுவாசியாக இருக்கிறார்.

இப்பொழுது மைம்கோபி, எப்படி சதியாட்டம் ஆடி அந்தக் கோவில் பட்டயத்தை இவர்கள் மூவரிடம் இருந்து பெறுகிறார்..? அல்லது பெற முடியாமல் தவிக்கிறார்..? இதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பில் சூரி மிரள வைக்கிறார். காமெடி நாயகனாக, குணச்சித்திர கதாபாத்திரமாக பார்த்த சூரி, இதில் கதையின் நாயகனாக வந்து ஜொலிக்கிறார். குறிப்பாக இடைவெளிக்கு முன் வரும் காட்சி, அனைவரையும் எழுந்து நின்று கைதட்ட வைக்கும்.

சசிகுமார் வழக்கமான நடிப்பில் இருந்து மாறுபட்டு இருக்கிறார். மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தன்னுடைய எதார்த்த நடிப்பில் இருந்து ஒரு படி மேலே சென்று நடித்திருக்கிறார். அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி, அவர் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

சூரியின் காதலியும் சரி,சசிகுமாரின் மனைவியும் சரி, உன்னி முகுந்தனின் மனைவியும் சரி அவர்களின் பங்கை செவ்வனே செய்து இருக்கிறார்கள்.

ஒரு சின்ன கதை கரு, அதில் உள்ள நேர்த்தியான திரைக்கதை, கனகச்சிதமான ஒளிப்பதிவு, அற்புதமான பின்னணி இசை என அனைத்து துறைகளிலும் தன்னுடைய ஆளுமையை காட்டியிருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார்.

வெற்றிமாறனின் நண்பரும், பாலு மகேந்திராவின் சிஷ்யனுமான துரை செந்தில்குமார் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய முத்திரையை பதிக்க போகிறார் என்பது உறுதி.

யுவன் சங்கர் ராஜா பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இந்தக் கதையில் வரும் சமுத்திரக்கனி, மலையாள நடிகர்களை போன்று மிக மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். இது மிகவும் ஆச்சரியம்.

ஒளிப்பதிவாளர் இந்த படத்திற்கு அப்புறம் மிகப்பெரிய படங்களை எடுப்பார் என்பது உறுதி.

சூரி, நடிப்பின் அரக்கர்கள் என்று சொல்லக்கூடிய தனுஷ் எஸ் ஜே சூர்யாவை தாண்டிவிட்டார் என்றே சொல்லலாம். இதற்கு மேல் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் கதாபாத்திரம் கொண்டவை என்பதும் உறுதி.

இந்தப் படம் A B கால் என்று அனைத்து சென்டர்களிலும் நன்றாக ஓடும். குறிப்பாக கால் சென்டரில், அதிலும் தென் மாவட்டங்களில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது நிச்சயம்.

இறுதியில் இயக்குனர் வெற்றிமாறனின் வாய்ஸ் ஓவரில், ” அதிகமாக ஆசைப்படும் ஒருவன் தவறான வழியில் செல்லும்போது இயற்கையும் கடவுளும் அவர்களை திருத்தம் முற்ப்படும் ” என்று கூறும் வசனம் அற்புதம்.

ஆக மொத்தத்தில் கருடன் திரையரங்குகளில் அண்ணாந்து பறப்பான்.