ராஜ்கிரண் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த மாணிக்கம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சூர்ய பிரகாஷ்.
ராஜ்கிரண் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது நடித்த படம் இதுவாகும். இப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக வனிதா விஜயாகுமார் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிக்க நடிகர் ராஜ்கிரணுக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்கிற பெருமையையும் ராஜ்கிரண் பெற்றார்.
மாணிக்கம் படத்தை தொடர்ந்து நான்கு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சரத்குமார் உடனான கூட்டணியில் முதன்முதலில் உருவான திரைப்படம் மாயி. கடந்த 2000-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் சரத்குமார் ஜோடியாக மீனா நடித்திருந்தார். மாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், மீண்டும் சூர்ய பிரகாஷ் உடன் இணைந்து திவான் என்கிற படத்தில் பணியாற்றினார் சரத்குமார்.
எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது… pic.twitter.com/vxgqBSPLQE
— R Sarath Kumar (மோடியின் குடும்பம்) (@realsarathkumar) May 27, 2024
இதைத்தொடர்ந்து ஜீவன் நடித்த அதிபர் என்கிற படத்தை இயக்கிய சூர்ய பிரகாஷ், அதன்பின்னர் இயக்கிய வருசநாடு என்கிற திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் சூர்ய பிரகாஷ் இன்று காலை திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.