
Kollywood NewsBy sivan|2024-06-15
மனித கடவுள்னா அது விவேக் சார் தான் : நடிகர் சாப்ளின் பாலு.
பிரபல நடிகரான சாப்லின் பாலு யூத் படத்தில் விவேக்கிற்கும், கோவை சரளாவிற்கும் இடையேயான காமெடி குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், " யூத் திரைப்படத்தில், விவேக் கோவை சரளா நடித்த 'சிநேகிதனே' காமெடி காட்சி, மக்கள் மத்தியில் அவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றது. அந்த காட்சியில், விவேக்கும் கோவை சரளாவும் ஒன்றாக இருந்த பின்னர், இனிமேல் உன் வாழ்க்கையே இருட்டுதான்டா என்று கூறி, நான் லைட்டை ஆப் செய்ய வேண்டும். அந்த காட்சியில் முதலில் கோவை சரளா மட்டும்தான் பிச்சைக்காரி போன்று அழுக்காக இருந்தார்.
அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதாவது பிச்சைக்காரியாக இருக்கும் அந்தக்கதாபாத்திரத்துடன் இணையும், விவேக்கின் உடம்பிலும் அழுக்கு இருக்க வேண்டும் அல்லவா? இதையடுத்து அந்த ஐடியாவை நான் அவரிடம் சொன்னேன். அவர் அதனை உடனே ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, அவர் மேலே கரியையும் பூசிக்கொண்டார். உண்மையில், அந்தப்படத்தில் எனக்கும் அவருக்கும் சம அளவிலான கேரக்டர். அப்போது அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார். ஆனாலும் அதனை விவேக் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கேட்டு நடித்தார். உண்மையில் கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அது அவரது ரூபத்தில்தான் இருப்பார். அதனால்தானோ என்னமோ கடவுள் அவரை சீக்கிரமே அழைத்துக்கொண்டு சென்று விட்டார். " என்று பேசினார்.

