
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-08-07
வயநாடு நிலச்சரிவு: பெருந்தொகையை நிவாரணமாக கொடுத்த பாகுபலி பிரபாஸ்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பெரும் தொகையை கொடுத்திருக்கிறார் பிரபாஸ்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்து போயின. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400ஐ கடந்துவிட்டது. இன்னும் நிறைய பேர் மண்ணுள் புதைந்து இருப்பதாக கூறப்படுவதால் தேடுதல் பணி ஒரு வாரத்தைக் கடந்து நடந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வயநாடு நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவவும், அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் நாடு முழுவதிலும் இருந்து கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் வாரிவழங்கி வருகின்றனர். கேரளாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் மோகன்லால் ரூ.3 கோடி வழங்கி இருந்தார். அதேபோல் அங்குள்ள முன்னணி நடிகர்களான மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் 25 லட்சம் வழங்கி இருந்தனர்.
அதேபோல் தமிழ் திரையுலகில் நடிகர் சீயான் விக்ரம் ரூ.20 லட்சம் வழங்கி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் வழங்கி இருந்தார்கள். நடிகை நயன்தாராவும் தன் பங்கிற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக கொடுத்திருந்தார். கோலிவுட்டை போல் டோலிவுட்டில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் வரிசையாக நிவாரண நிதியை வாரி வழங்கி வருகின்றனர்.
நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் இணைந்து ரூ.1 கோடியும், நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சமும் கொடுத்திருந்த நிலையில், தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் தன் பங்கிற்கு பெரும் தொகையை நிவாரண நிதியாக கொடுத்திருக்கிறார். அவர் ரூ.2 கோடியை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வயநாடு மக்களுக்கு உதவ பெரும் தொகையை நிவாரணமாக கொடுத்துள்ள நடிகர் பிரபாஸுக்கு பாராடுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
