திருப்பதி கோயிலில் லட்டுகளை தயாரிக்க குறைந்த தரம் கொண்ட நெய் பயன்படுத்தப்படுவதாக வெளியான புகாரை அடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .அதாவது அந்த அறிக்கையின் படி இந்த மாதிரிகளில் கண்டறியப்பட்ட எஸ் வேல்யூ என்பது நிர்ணயம் செய்யப்பட்ட வரம்புகளை விட அதிகமாக இருக்கிறது. அத்துடன் இந்த நெய்யில் சோயாபீன் ஆயில், சன் ஃபிளவர் ஆயில், பாமாயில் மற்றும் மீன் எண்ணெய், மாட்டு இறைச்சி அல்லது பன்றிக் கொழுப்பு போன்றவற்றின் தடயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. பொதுவாக தூய்மையான பாலின் கொழுப்பில் எஸ் வேல்யூ என்பது 98.05 முதல் 104.32 வரையில்தான் இருக்க வேண்டும் ஆனால் இந்த மாதிரிகளை சோதனை செய்ததில் அதில் எஸ் வேல்யூ 117.42 வரை இருந்ததாக கூறப்படுகிறது. லட்டு பிரசாதத்தை தயாரிக்க பயன்படுத்தம் நெய்யில் பன்றி, மாடு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்புகள், மீன் எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வு மூலம் தெரியவந்திருப்பதாக ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில், "திருப்பதி பாலாஜி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கண்டறியப்பட்டு இருப்பதை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சனாதன தர்மத்தை எந்த வடிவதத்திலும் இழிவுப்படுத்தக்கூடாது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் இது தொடர்பாக பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். தற்போது நடந்த இந்த விவகாரம் என்பது கோயில்கள் மற்றும் பிற தர்மத்தின் நடைமுறையையும், நம்பிக்கையையும் இழிவுப்படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. கோயில்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் ஆராய தேசிய அளவில் 'சனாதன தர்ம ரக்சனா வாரியம்' அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்க பதிவில் பகிர்ந்திருப்பாதவது, "மதிப்புக்குரிய பவன் கல்யாண். நீங்கள் துணை முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது. இது பற்றி தயவு செய்து விசாரியுங்கள். குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து ஏன் பொதுமக்களை அச்சுறுத்து, இந்த விஷயத்தை தேசிய அளவில் ஊதி பெரிதாக்குகிறீர்கள். நாடு முழுவதும் போதுமான அளவில் வகுப்புவாத பிரச்னைகள் இருக்கின்றன. (மத்தியில் இருக்கும் உங்கள நண்பருக்கு நன்றிகள்)" என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்யை வழங்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்பட்டிருப்பதோடு, அந்த நிறுவனங்களின் மீத கிரிமினல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.