
tamil news ➔ kollywood newsBy Ottran Dorai|2023-11-27
பெரிய பட்ஜெட் படங்களை தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பாரா லோகேஷ்?
தமிழ் திரையுலகின் சமீபத்திய முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' என தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் 'ரஜினிகாந்த் 171' படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது ஜி ஸ்குவாட் எனும் பெயரில் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், '' என்னுடைய நண்பர்களுக்கும், என்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும், புதிய பாணியிலான திரைப்பட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையிலும் படங்களை தயாரிக்கவே ஜி ஸ்குவாட் எனும் பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். என்னுடைய படைப்புகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதைப் போல்.. என்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாராகும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
அவருடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாராகும் முதல் திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். லோகேஷ் தான் ஆரம்பித்துள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தில், தான் இயக்கும் பெரிய பட்ஜெட் படங்களை போன்ற படங்களை இயக்குவதற்க்கு புதிய இயக்குநர்களுக்கு பட்ஜெட் ஒதுக்குவாரா அல்லது சிறிய அல்லது நடுதர பட்ஜெட் படங்களை மட்டும் தயாரிப்பாரா என்பது அவரது தயாரிப்பில் வரும் முதல் படத்தை பார்த்தால் தான் தெரியும்.
இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதை திரையுலகத்தை சார்ந்த பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
