அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தை, உலகளாவிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்றப் படமான ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ உடன் ஒப்பிட்டுள்ளார். நாவலாசிரியர் பென்யாமின் எழுதிய இந்த கதையை பிரபல இயக்குநர் பிளெஸ்ஸி படமாக்கியுள்ளார். கதாநாயகனின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க பிருத்விராஜ் சுகுமாரன் தனது இரத்தமும் சதையையும் கொடுத்துள்ளார். இது திரையில் பார்க்கும்போது சினிமா ரசிகர்களை இந்த விஷயம் நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும். குறிப்பாக, தொற்றுநோய் கட்டத்தின் போதும் படப்பிடிப்பிற்காக படக்குழு மேற்கொண்ட கடினமான பயணத்தை வெளிப்படுத்தும் காட்சித் தொகுப்பு ரசிகர்கள் மத்தியில் திகைப்பூட்டி இந்தப் படத்தின் மீது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்தப் படம் பார்வையாளர்கள் மத்தியில் ஆழமான மறையாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் அதிகாரப்பூர்வ இணையதள வெளியீட்டு விழாவின் போதுதான் இந்த விஷயத்தை ரஹ்மான் கூறியுள்ளார். இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் ரஹ்மான் மேலும் பேசியதாவது, "'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படம் ஒரு வகையில் இசையமைப்பாளரின் திரைப்படம். மொத்த டீமும் இந்தப் படத்திற்காக தங்கள் ஆன்மாவைக் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த உழைப்பைப் பார்த்தபோது, சினிமா மீதான எனது நம்பிக்கை மீண்டும் உறுதியானது” என்றார். 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் எல்லைத் தாண்டிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 10 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நிலையில், மார்ச் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியிடப்படும். இந்த நிலையில், இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை படக்குழு அறிமுகப்படுத்தியது. 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படம் திரையரங்குகளில் 28 மார்ச் 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகத் தயாராக உள்ளது.