'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்து வரும் படத்துக்கு 'கராத்தே பாபு' என தலைப்பு வைத்துள்ளது படக்குழு.
இந்த தலைப்பை அறிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அது கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது.
ரவி மோகன் நடிப்பில் பொங்கலுக்கு 'காதலிக்க நேரமில்லை' படம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அவர் தனது 34-வது படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தை 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி வருகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். 'மேயாத மான்', 'ஆடை' பட இயக்குநர் ரத்னகுமார் மற்றும் பாக்கியம் குமார் இந்த படத்தின் கதையை இயக்குநருடன் இணைந்து எழுதி உள்ளனர்.
எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். கதிரேஷ் அழகேசன் எடிட்டிங் பணிகளையும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் இதில் பணியாற்றுகின்றனர். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. நடிகர் நாசர், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், சுப்ரமணியம் சிவா, பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். இந்த படம் அரசியல் களத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவில் சட்டப்பேரவை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள எதிர்க்கட்சியை சேர்ந்த சண்முக பாபுவின் (ரவி மோகன்) பழைய பெயரை தெரிந்து கொள்ள தமிழக முதல்வர் விரும்புகிறார். பெயரின் முக்கியத்துவம் குறித்து முதல்வராக நடித்துள்ள நாசர் பேரவையில் எடுத்து சொல்கிறார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடக்கிறது.
அப்போது பேசும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் சண்முக பாபு, 'என்னுடைய பழைய பேர் ஆர்.கே.நகர் மக்கள் கொடுத்தது. அது தான் என்னை இங்கு கொண்டு வந்தது. அந்தப் பெயர்…' என ரவி மோகன் சொல்ல 'கராத்தே பாபு' என்ற படத்தின் டைடில் வெளியாகிறது.

