வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்து வருகிறது தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம்". இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் தளபதி விஜய் நேர்த்தியாக நடிக்க வைத்து மீண்டும் தான் ஒரு கமர்சியல் கிங் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. பல சுவாரசியமான திருப்புமுனைகளோடு உருவாக்கப்பட்டுள்ள கோட் திரைப்படம் ஆறு நாட்களைக் கடந்து தற்போது வெற்றிகரமாக பயணித்து வருகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக பல பேட்டிகளில் பங்கேற்று கோட் திரைப்படத்தில் தான் பணியாற்றியது குறித்து பற்பல சுவாரசியமான சம்பவங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. ஏற்கனவே நடிகை சினேகா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த நயன்தாரா பற்றி பேசிய வெங்கட் பிரபு, இப்பொது மைக் மோகன் கதாபாத்திரம் குறித்து, அதற்கு அவர் அணுகிய நடிகர்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். விஜய்யின் கோட் திரைப்படத்தில் வில்லனாக அவர் நடித்த கதாபாத்திரத்தில், நடிக்க பிரபல நடிகர் மாதவன் மற்றும் பிரபல நடிகர் அரவிந்த்சாமி ஆகிய இருவரையும் அணுகியதாகவும், ஆனால் அவர்கள் வேறு திரைப்படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.