
tamil news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2025-06-02
கன்னட மொழி தான் முக்கியம்: ஆனால் நான் கமலின் ரசிகன், கன்னட நடிகர் சிவராஜ் குமார்!
தக்லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மே 24 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், "கர்நாடகாவில் இருக்கும் ராஜ்குமாரின் குடும்பம் என்னுடைய குடும்பம். அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்திருக்கிறார். ஆதலால்தான் நான் பேச்சை தொடங்கியபோது உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது" என கூறினார்.
இவர் இவ்வாறு கூறியது கர்நாடகாவில் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. கன்னட அமைப்புகளும் அரசியல்வாதிகள் பலரும் "கன்னட மொழியை குறித்து தவறாக பேசிய கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது" என போர்க்கொடி தூக்கத் தொடங்கினர்.
மேலும் கர்நாடக பிலிம் சேம்பர், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத வரை தக் லைஃப் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்படும் என கூறியுள்ளது. எனினும் கமல்ஹாசன், தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்ற முடிவில் திடமாக உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் நடிகர் சிவராஜ்குமார். அப்போது பேசிய அவர், "அனைத்து மொழியும் நமக்கு முக்கியம்தான். ஆனால் தாய்மொழி என்று வரும்போது கன்னட மொழிக்குத்தான் முன்னுரிமை. இதில் எந்த சந்தேகமும் கிடையாது. கன்னட மொழிக்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன். கமல்ஹாசன் தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என நான் சொல்லக்கூடாது. அவர் என்னை விட சீனியர் நடிகர். நான் அவரின் ரசிகன்" என்று கூறினார்.
"தக் லைஃப்" ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியபோது சிவராஜ்குமார் அதனை ஆதரிக்கும் வகையில் கைத்தட்டியதாக கன்னடர்கள் பலரும் புகார்களை கூறி வந்தனர். இது குறித்து அப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது, "அந்த விழாவில் என்ன நடக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் கமல்ஹாசன் பேசும்போது நான் கைத்தட்டியதாக காட்டுகிறார்கள். அவர் எனக்கு சித்தப்பா என்று சொன்னபோதுதான் நான் கைத்தட்டினேன்" எனவும் பதிலளித்தார்.
"தக் லைஃப்" திரைப்படம் வருகிற 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இதில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
