
tamil news ➔ kollywood newsBy sivan|2024-12-30
இளையராஜாவுக்கு பின் சந்திரபாபு பயோபிக்கிலும் நடிக்க தனுஷ் ஆர்வம்!
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'இட்லி கடை', 'குபேரா', ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படம், விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படம் என பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
இதில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் 'இட்லி கடை' ஆகிய படங்களை அவரே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார். இப்படத்தினை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சந்திரபாபு பயோபிக்கில் நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று இருக்கிறது. அவரோ கதை சுவாரசியமாக இருப்பதால், எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.
தென்னிந்திய சினிமா வரலாற்றில் ரூ.1000 சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர் ஜேபி சந்திரபாபு என்று கூறப்படுகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் உரிமையை அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து வாங்கியுள்ளது. அதே போல் இயக்குநர் கே ராஜேஷ்வர் எழுதிய 'ஜேபி: தி லெஜண்ட் ஆஃப் சந்திரபாபு' நாவலின் உரிமையையும் வாங்கியுள்ளது.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளார். மேலும், பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களுக்கு பங்களிக்கவுள்ளார்.
