விஜய் தேவர கொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம். பிரிட்டிஷ் காலகட்டத்தில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாக்குளம் பகுதியில் நடந்த போரில், சில உயிர்கள் தப்பிக்கின்றன. அவர்கள் இலங்கை அருகே உள்ள திவி தீவில் தஞ்சம் பெயர்கிறார்கள். அதன் பின் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் கதை தொடர்கிறது. சாதாரண கான்ஸ்டபில் ஆக இருக்கும் விஜய தேவர கொண்டா தன் அண்ணனை தேடி 18 ஆண்டுகளாக அலைந்து வருகிறார். அப்பொழுது காவல்துறை உயர் அதிகாரியிடம் இருந்து இவரின் வீரத்தை பாராட்டி அவருக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அந்த டாஸ்கின் படி இவர் செய்தால், இவருக்கு இவருடைய அண்ணனை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுவதால், இவரும் அதற்கு ஒத்துக்கொள்கிறார். இந்த ரகசிய உளவு வேலைக்காக ஆயுள் கைதியாக இலங்கை சிறையில் தள்ளப்படுகிறார். அங்கு அவரது அண்ணனை சந்திக்கிறார். அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தில் விஜய் தேவர கொண்டாவை விட சத்ய தேவ் வின் நடிப்பு அருமையாக உள்ளது. மற்ற நடிகர்கள் அனைவரின் நடிப்பு கொஞ்சம் சுமார் ரகம் தான். முதல் பாதி திரைக்கதை ஏதோ ஒரு வித்தியாசமான கதைக்களத்திற்குள் நம்மை எடுத்துச் செல்கிறது என்று யோசிக்கும் பட்சத்தில் , இரண்டாம் பாதி படம் நமக்கு முழுக்க முழுக்க சமீபத்தில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ படத்தையே திருப்பி எடுத்து வைத்ததை போல் காட்டுகின்றன. படத்தில் ஒரு சில வசனங்கள் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் அருமையாக இருந்தாலும் சில வசனங்கள் நம்மை முகம் சுளிக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக இலங்கை பகுதி மிகவும் சென்சிட்டிவான இடம் என்று அனைவருக்கும் தெரியும். அப்பொழுது ஒரு வசனம் இந்த மண்ணில் அடிப்படையிலேயே ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று கூறுவார்கள். அது ஒரு தேவையில்லாத வசனம். அது மாதிரி பல வசனங்கள் தேவையில்லை என்று கூறலாம். படத்தின் ஒளிப்பதிவும், கலை இயக்கமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அனிருத்தின் பின்னணி இசை பெரிதாக ஜொலிக்கவில்லை என்றே சொல்லலாம். அதிலும் நிறைய காட்சிகளில் வரும் பின்னணி இசை கேஜிஎப் படத்தையே ஞாபகப்படுத்துகின்றன. இந்தப் படத்தின் இயக்குனர் கௌதம் தின்னனுரி இந்த கதையை எந்த விதத்தில் கூறினார் என்று தெரியவே இல்லை. சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்தை ஒரு தடவை பார்த்திருந்தால் கூட அவருக்கு வேறு விதமான சிந்தனைகள் தோன்றி இருக்கலாம். எங்கே மிஸ் ஆனது என்று தெரியவே இல்லை. ஆக மொத்தத்தில் Kingdom படம் தெலுங்கு ரசிகர்களுக்கு வேண்டுமானால் பிடிக்கலாம். தமிழ் ரசிகர்களுக்கு பிடிப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு.