16 வருடம் கழித்து வெள்ளிவிழா நாயகன் மோகன் நடித்திருக்கும் படம். தன் மகளின் தற்கொலைக்கு காரணம் என்ன என்ற கேள்வியுடன் மோகன் தனது தேடலை தொடங்குகிறார். அதிலிருந்து தொடங்கும் பலவிதமான அதிர்ச்சி சம்பவங்கள் தான் படத்தின் மொத்த கதையும். இந்த வயதிலும் மோகன் தனது உடம்பை இளமையாக வைத்திருக்கிறார். (யார் அவருக்கு எய்ட்ஸ் என்று சொல்லி புரளியை கிளப்பி, அவரது சினிமா வாழ்க்கையை முடித்தார்களோ, அவர்களுக்கு கன்னத்தில் பலார் பலார் என்று அரை விழுந்தாற் போல் இருந்திருக்கும்). மோகன் தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தில் வரும் சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகி பாபு ஆகிய அனைவரின் காமெடி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. மாறாக மோகனுக்கு உதவி செய்யும் குழுக்களாக வரும் புதுமுக நபர்கள் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, மோகன் மகளின் காதலனாக வரும் சந்தோஷ் பிரபாகர் தனக்கு இது முதல் படம் என்ற சுவடு எங்கும் தெரியாமல் நடித்திருக்கிறார். வனிதா விஜயகுமார் பழ.கருப்பையா ஆகியோரது வசனங்கள் மிகவும் அபாரம். சுரேஷ் மேனன் நடிப்பு நன்றாக இருந்தது. படத்தின் பெரிய பிரச்சனை திரைக்கதை தான். ஒரே ஒரு கருவை எடுத்து அதன் போக்கில் கதை சொல்ல முயற்சி செய்யும் பொழுது, காட்சிகளை சுவாரசியமாக்க வேண்டும் என்ற பெயரில் பல கிளைக் கதைகளைப் புகுத்தி, எந்தவித லாஜிக்கல் திங்கிங்கும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள். முதல் பாதி தான் ஆமை வேகத்தில் செல்கிறது என்றால், இரண்டாம் பாதி ஆமையை நண்டு பிடித்து இழுத்த கதையாக இன்னும் மெதுவாக செல்கிறது. கதை மையக் கருவிற்குள் வருவதற்கு திணறுகிறது. படத்தின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதேபோல் இசையிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். நல்ல கருவை, கருமுட்டையிட விடாமல் சிதைத்தது, இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம். ஆக மொத்தத்தில் ஹரா ஒரு தடவை வேண்டுமானால் பார்க்கலாம்.