குழந்தை வயது முதல் நடிக்க தொடங்கிய நடிகர் சிலம்பரசன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், அவரது தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து தம், குத்து போன்ற படங்களில் நடித்து வந்த சிம்புவிற்கு மன்மதன் என்ற மாபெரும் வெற்றிப்படம் அமைந்தது. அவரே இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையும் எழுதியிருந்தார்.

அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சிம்புவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சிம்பு ஒருகட்டத்தில் சில தோல்விகளை சந்தித்தார்.

வெகுநாட்களுக்கு பின் மாநாடு படத்தின் ஒரு சிறந்த கம்பேக் கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர் வெற்றிகளை குவித்தார் சிம்பு.

தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக்லைப் என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிம்புவின் திரைவாழ்க்கையில் மறக்கமுடியாத படங்களில் ஒன்றான விண்ணை தாண்டி வருவாயா மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

அதாவது வருடா வருடம் இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பல திரையரங்கங்களில் ரீரிலீஸ் செய்யப்படும். அவ்வாறு ரீரிலீஸ் செய்யப்பட்ட விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் சென்னையில் இருக்கும் PVR திரையரங்கில் ஆயிரம் நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

ஒரு ரீரிலீஸ் திரைப்படம் ஆயிரம் நாட்களை கடந்து ஓடுவது இதுவே முதல்முறையாகும். இப்படிப்பட்ட சாதனையை சிம்புவின் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் படைத்துள்ளது என்பது தமிழ் சினிமாவிற்கே பெருமை என்று கூறப்படுகிறது.