மறைந்த திரையிசை பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் நினைவு நாள்ளையொட்டி அவரது நினைவை போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயரை சூட்டி அறிவிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது, "பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும் திரைப்படங்களில் நடித்தும் பல்துறை வித்தகராக விளங்கியவரும் ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும் முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பிற்குரியவருமான எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த 25.9.2020 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
காலம் அவரைப் பிரித்தாலும் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும் அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்பி பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயரிடப்படும்" என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

