
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-09-21
ஞானவேலுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை
வேட்டையன்' படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக ரஜினிகாந்திடம் சென்ற அந்தப்படத்தின் இயக்குநர் ஞானவேல், இந்தப்படத்தில் மணிரத்னத்தின் 'தளபதி' படத்தில் வெளிப்படுத்திய நடிப்பை இதிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு ரஜினிகாந்த் அவருக்கு ஒரு குட்டிக்கதையை கூறியிருக்கிறார். இது குறித்து ரஜினிகாந்த் நேற்றைய தினம் நடந்த 'வேட்டையன்' ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார்
அதில் அவர் பேசியதாவது, 'தளபதி' 'முள்ளும் மலரும்' படங்கள்ல நீங்க கொடுத்த ஆக்டிங்கை, இந்தப்படத்துல நாம கொண்டு வரணும்னு ஞானவேல் சொன்னார். உடனே, நான் அவருக்கு ஒரு கதை சொன்னேன். அது இமாச்சல்ல நடந்த ஓர் உண்மையான கதை. இமாச்சல் உத்தரகாசில ஒரு ஊர்ல ஒரு தோபி இருந்தார். அவன்கிட்ட ஒரு கழுதை இருந்துச்சு. அங்குள்ள ஆசிரமத்திற்கு நிறைய துணிகள் வரும். அந்த துணிகளை கீழே ஓடும் ஆத்துல தான் துவைக்கணும்.
அங்க போகணும்னா கிட்டத்தட்ட 10,12 கிலோமீட்டர் நடக்கணும். ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆனா, அதுக்கு ஒரு குறுக்கு வழி இருந்துச்சு. அது கொஞ்சம் கரடு முரடா தான் இருக்கும். அங்க நடந்து போறதே ரொம்ப கஷ்டம். அதனால, துணிகள அவன் வச்சிருந்த கழுதை மேல ஏத்திக் கொண்டு போறது வழக்கமா இருந்துச்சு. அந்தக் கழுத அவனுக்கு உயிர் மாதிரி. ஒரு நாள் அந்தக் கழுதை காணாம போயிடுச்சு. இத அவன்கிட்ட சொன்னப்ப, அவன் அப்படியே அதிர்ச்சியில உட்காந்துட்டான். அவன்கிட்ட எப்போதுமே ஒரு சிரிப்பு இருந்துட்டே இருந்துச்சு. ஒரு வருஷம் பார்த்தாங்க, ரெண்டு வருஷம் பாத்தாங்க. அதுக்கப்புறம் அவன் கூட எடுத்த பொண்டாட்டி, பிள்ளைகள் எல்லாமே அவனை விட்டு போய்ட்டாங்க.
அவனும் ஒரு காவி துணியை உடுத்திக்கிட்டு ரொம்ப தூரம் நடந்து வந்து, ஒரு மரத்துக்கு கீழ அப்படியே சிரிச்சிகிட்டே உட்கார்ந்துட்டான். இத பார்த்த அங்க இருந்தவங்க, யாரோ பெரிய மகான் வந்து இருக்கார்ன்னு நினைச்சு, அவர வழிபட ஆரம்பிச்சிட்டாங்க. காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமா வேகமாக பரவி, அவருக்கு சிஷ்யர்கள் உருவானங்க. அது அவர் நல்ல நேரமான்னு தெரியல. அவர் நினைச்சது எல்லாமே நடக்க ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல ஆயிரக்கணக்கான நபர்கள் அவரைப் பார்க்க வர ஆரம்பிச்சிட்டாங்க.
இந்த நிலையில், ஒரு அதிகாலையில ஒரு கழுதை அந்த பக்கமா கத்திக்கிட்டு போச்சு. அதைக்கேட்ட தோபிக்கு எல்லாமே ஞாபகத்துக்கு வந்து, என் கழுதை எங்க… என் கழுதை எங்கன்னு கத்த ஆரம்பிச்சிட்டார். அப்புறமா உண்மை என்னன்னு தெரிய வர, இத நீ வெளிய சொன்னா கதை கந்தலாயிரும். உனக்கு ஒன்னும் தெரியாது. அதனால, இத இப்படியே மெயின்டெய்ன் பண்ணுக்கோ சொல்ல, அத அவர் அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டார்ன்னு சொன்னேன். இதைக்கேட்ட ஞானவேல் இதை ஏன் சார் என்கிட்ட சொல்றீங்கன்னு கேட்டார். அதுக்கு அந்த தோபி நான் தான் சொன்னேன்.
நீங்க தளபதில ஓகே ஆன டேக்கை தான் பார்த்தீங்க. அதுக்கு முன்னாடி கிட்டத்தட்ட 15, 20 டேக்குகள் போச்சு. 'முள்ளும் மலரும்' படத்துல மகேந்திரன் ஓகே சொன்னாலும், பாலு மகேந்திரா ஒன் மோர் சொல்லி நடிக்க வச்சு என்ன கிழி கிழின்னு கிழிப்பாங்க. காளி படத்த பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அதுல மகேந்திரனுடைய சாயல் அப்படியே இருக்கும். 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தோட ஷூட்டிங் போனப்ப கிட்டத்தட்ட டயலாக் மட்டுமே 11 பக்கம் இருந்துச்சு. நான் அந்த படமே வேணாம்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன் அதுக்கப்புறம் எஸ்பி முத்துராமன் என்ன பேசி, சமாதானப்படுத்தி அந்த படத்துல நடிக்க வச்சார்.
என்ன நல்ல நடிகன் அப்படின்னு சொன்னது ஏதோ அதுவா நடந்து போச்சு. அத அப்படியே சிரிச்சு நான் மெயின்டெயின் பண்ணிட்டு இருக்கேன். நான் அதைப்பற்றி ரொம்ப பேசினா கதை கந்தல் ஆயிடும். 'தளபதி' 'முள்ளும் மலரும்' பாதையில நான் போனா, நம்ம கதை கந்தல்தான். நல்ல வேளையா 'போக்கிரி ராஜா' 'முரட்டுக்காளை' படங்கள் நம்ம ட்ராக்க சேஞ்ச் பண்ணிடுச்சு. நான் ஸ்டைலா சில விஷயங்கள் பண்றேன். அதுவே நல்லா போயிட்டு இருக்கு. அப்புறம் ஏன் அதுல போய் நம்ம கஷ்டப்படணும்.
அதனால என்னை நடிக்க வைக்கிறேன்ன்னு சொல்லி எதையும் பண்ணாதீங்க. சகுனிகளே இருக்கக்கூடிய இந்த சமுதாயத்தில, நீ நியாயவாதியா இருந்தா பொழைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அதனால சாணக்கியத்தனமும் வேணும். சாமர்த்தியமும் வேணும். அப்பதான் நீ மேல வர முடியும். அவர்கிட்ட இது ரெண்டுமே இருக்கு. அவர் பொழச்சுப்பாரு. நம்ம கெட்டவங்ககிட்ட தான் நல்லதே கத்துகிறோம்." இவ்வாறு அவர் அதில் பேசினார்.
