பிரபல இயக்குநர் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து, மலையாளத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி எடிட்டர் ஷமீர் முகமது வெளியிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு நேர்காணலில் பேசும் அவர், "அன்பறிவு மாஸ்டர்ஸ் மூலம் 'கேம் சேஞ்சர்' படத்தில் எடிட்டராக சேர்ந்தேன். ஷங்கர் என்னிடம் 7.30 மணி நேரத்துக்கும் அதிகமான ஒரு வெர்ஷனை கொடுத்தார். அதை 3 மணி நேரமாக கடுமையாக குறைக்க நான் சென்னையில் 350 நாட்கள் இருந்தேன். சுமார் 3 ஆண்டுகள் வேலை பார்த்த பின், இறுதியில் திட்டமிடல்களின் இல்லாமை காரணமாக நான் விலகினேன். இது என் வாழ்க்கையிலேயே மோசமான அனுபவம்" என தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள், கடந்த கால வெற்றிகளுக்கு மத்தியில் தற்போது சவால்களை சந்தித்து வரும் ஷங்கருக்கு மேலும் எதிரொலி ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலர், "தயாரிப்பாளரின் பணத்தையும் நேரத்தையும் மதிக்காதவர் ஷங்கர்" எனக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். 'அங்கமாலி டயரீஸ்', 'சார்லி' என 50-க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களைச் செய்த ஷமீர், 'கேம் சேஞ்சர்' திட்டத்திலிருந்து விலகியபின், அதில் ரூபன் எடிட்டராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.