தமிழகத்தில் ஆயுத கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் பயங்கரவாத குழுவின் திட்டத்தை முறியடிக்க, மனவேதனையால் சிதறிப்போன இளைஞன் சிவகார்த்திகேயனை பயன்படுத்தும் தேசிய புலனாய்வு அமைப்பின் முயற்சி தான் ‘மதராஸி’ படத்தின் மையக் கதை. காதலி பிரிந்து போன சோகத்தில் தற்கொலை செய்ய நினைக்கும் ஹீரோ, எதிரிகளை எதிர்த்து போராடும் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுகிறான். அவரது மனநிலை, காதல், குடும்ப பந்தங்கள் ஆகியவை கலந்து, சமூகத்திற்கான எச்சரிக்கையையும் சொல்லும் படம் இது. சிவகார்த்திகேயன், ஆக்‌ஷன் காட்சிகளில் விறுவிறுப்பாகவும், எமோஷனல் காட்சிகளில் மனதை உருக்கும் வகையிலும் நடித்துள்ளார். அம்மா போன் செய்து பேசும் காட்சியில் பார்வையாளர்கள் கண்கலங்குவது நிச்சயம். நாயகியாக வரும் ருக்மணி வசந்த், இரண்டாம் பாதியில் கதையின் உயிராக மிளிர்கிறார். வில்லனாக வரும் வித்யூத் ஜமால் ஹாலிவுட் ஸ்டைல் பஞ்ச் வசனங்களால் மிரட்ட, சபீர் கல்லரக்கல் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் கதைக்கு நம்பகத்தன்மையை தருகிறார்கள். அனிருத்தின் பின்னணி இசை, ஒவ்வொரு காட்சியையும் மேலும் தீவிரமாக்குகிறது. சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தைக் கூட மிஞ்சும் வகையில் உள்ளது. ஸ்ரீகர் பிரசாதின் தொகுப்பு, இரண்டு மணி நேரத்தைக் கடந்தாலும் சலிப்பே இல்லாமல் ரசிக்க வைக்கிறது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சமூக பிரச்சினையை பேசும் பாணியில், ஆக்‌ஷன் மற்றும் காதலை சரியான சமநிலையில் சேர்த்து, சிவகார்த்திகேயனை மாஸாக உருவாக்கியுள்ளார். படம் முழுவதும் தொய்வின்றி நகரும் திரைக்கதை, அனைவரையும் கவரும். முடிவாக, ‘மதராஸி’ ஆக்‌ஷன் ரசிக்க விரும்புவோருக்கும், எமோஷனில் ஈடுபட நினைப்போருக்கும் சிறந்த விருந்தாக அமைகிறது. மதிப்பீடு: 4/5